தேனி அருகே விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி தலைமையில் (23.02.2024) நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் நடப்பாண்டு நெல் இதுவரை 13,364 எக்டர் பரப்பிலும் சிறுதானியங்கள் 12,609 எக்டரிலும், பயறு வகைகள் 8,618 எக்டரிலும், பருத்தி 2,867 எக்டரிலும், எண்ணெய்வித்து பயிர்கள் 2,405 எக்டரிலும் மற்றும் கரும்பு 2,357 எக்டர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக நடப்பு பருவத்தில் விவசாயிகளுக்கு நெல் விதை இதுவரை 137 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் விதை 63.8 மெ.டன்னும் (RNR, CO 55), சிறுதானியங்கள் 2.00 மெ.டன்னும் (கம்பு கோ 10, குதிரைவாலி MDU 1) பயறு வகை விதைகள் 4.54 மெ.டன்னும், எண்ணெய்வித்துப் பயிர் விதைகள் 2.3 மெ.டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்குத் தேவையான உரங்களான யூரியா 1,637 மெ.டன்னும் (MFL, Spic & IFFCO), DAP 786 மெ.டன்னும் (Green star, IPL & IFFCO) பொட்டாஷ் 555 மெ.டன் (IPL) மற்றும் கலப்பு உரங்கள் 4,710 மெ.டன்னும் (Fact, GFL, CIL, IFFCO) தனியார் நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நெல்லிற்கு பின் பயிர் சாகுபடி திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு ரூ.400 மானிய விலையில் பயறு வகை விதைகள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும், தேனி மாவட்டத்தில் பாரத பிரதமரின் கவுரவ ஊக்கத்தொகை திட்டத்தில் இன்னும் 3,485 விவசாயிகள் e-KYC நடைமுறையினை நிறைவு செய்யாமல் உள்ளனர். அவர்கள் உடன் வங்கிகிளை அல்லது பொது சேவை மையத்தினை அணுகி பயன்பெற கேட்டுக்கொள்ளப்பட்டது.
சாகுபடிக்கு ஏற்ற தரிசு நிலங்களில் எண்ணெய்வித்து மரப்பயிர்களான புங்கம் எக்டருக்கு 500 எண்கள் சாகுபடி செய்ய ரூ. 20,000-ம், இலுப்பை எக்டருக்கு 500 எண்கள் சாகுபடி செய்ய ரூ.15,000-ம் மான்யமாக வழங்கப்பட்டு வருவதாகவும், வேளாண்மை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உழவன் செயலி மூலம் பதிவேற்றம் செய்து மானியம் வழங்கப்படுவதால் விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து வேளாண்மை துறையின் மூலம் வழங்கப்படும் மானியங்களை பெற்று பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகுமாறும் வேளாண்மை இணை இயக்குநர் அவர்களால் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரத்தினை சம்மந்தப்பட்ட விவசாயிகளுக்கு தெரிவிக்குமாறு அனைத்து துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் பன்னீர் செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) பொ.தனலெட்சுமி, தோட்டக்கலை துணை இயக்குநர் பிரபா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், மற்றும் ஏராளமான விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



