ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரத்தில் பழமையான ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி, ஸ்ரீ இருளப்பசாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரத்தில் 200ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி , ஸ்ரீ இருளப்பசாமி திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது.
முன்னதாக கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முதல் நாளில் பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் குடம் அழைப்பு செய்யப்பட்டு, வாஸ்து சாந்தி ,பிரவேச பலி உள்ளிட்ட முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது
இரண்டாம் நாளில் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் அதிகாலை முதல் நடைபெற்று ,கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை உள்பட பல்வேறு சடங்குகள் நடைபெற்று , பின்னர் பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் பூஜிக்கப்பட்டது. பின்னர் யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடாகி , கோபுர கலசங்களுக்கு ஆச்சாரியார்களால் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அப்போது வானத்தில் கருடன்கள் வட்டமிட்டு ஆசி பொழிந்ததால் பக்தர்கள் பக்தி பரவசமடைந்து கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு வழிபட்டனர். பின்னர் கும்பாபிஷேகம் செய்யபட்ட புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது .
தொடர்ந்து பரிவார தெய்வங்களான ஸ்ரீ எங்கம்மாள், ஸ்ரீ கருப்பசாமி கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்று, மூலவர்களுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை தலை கட்டுதாரர்கள் ,சண்முகசுந்தரபுரம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.





